பரமக்குடி, அக்.4: பரமக்குடியில் இயற்கை விவசாயம், இயற்கை கால்நடை பண்ணைகள் குறித்து இளையான்குடி கல்லூரி மாணவிகள் கள ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர்.ஜாஹிர் உசேன் கல்லூரியில் கல்வியியல் பயிலும் 90 மாணவிகள் பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்து நேரிடையாக தெரிந்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் பணி அனுபவத்துக்காக வேந்தோணி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். ராஜலெட்சுமி என்பவர் வேந்தோணி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை முறையில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் கருப்பு கோழி என்ற கருங்கோழி இனத்தை சேர்ந்த கோழிகளை இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். கருங்கோழியின் முட்டை பெண்களின் கர்ப்பப்பை பிரச்னைக்கு சிறந்த மருந்தாக இருப்பதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது எனவும், இங்கு காய்கறி உற்பத்தி, சிறு தானியங்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக தயாரித்தல், இயற்கை முறையிலான பூச்சி விரட்டிகள், தயாரிக்கப்படுகின்றன என மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.