தாராபுரம். அக். 2:10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தில் தாராபுரத்தில் நேற்று ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் பீர் ஜாபர் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் இளங்கோ, சுப்புரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது அரசாணை எண் 56 ரத்து செய்து அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், 21 மாத நிலுவை தொகையை மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஏபிசிடி என பிரிக்காமல் ஒருமாத ஓய்வூதியம் போனசாக வழங்க வேண்டும். தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வு பெறும் நாளன்று ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் மற்றும் அரசு விதிக்கு புறம்பாக ஓய்வூதியம் பெறுவதை நிறுத்தம் செய்வதை அரசு கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மேகவர்ணன், இணை செயலர்கள் மரிய செலஸ்டின், முருகேசன், ஜீவானந்தம், ராஜீ உட்பட பலர் கலந்துகொண்டனர்.