தொண்டி, அக்.1: நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஓமன் நாட்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மாயமானார்கள். அவர்களை கண்டுபிடித்து தருமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகேயுள்ள நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் கார்மேகம் (50), காசிலிங்கம் (35), ராமநாதன் (38), காசிலிங்கம் (23) ஆகியோர் ஓமன் நாட்டில் மசிரா தீவில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த 14ம் தேதி தமிழகம் மற்றும் வங்கதேச மீனவர்கள் 8 பேர் கடலுக்கு சென்றவர்கள் கரைக்கு திரும்ப வில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அந்நாட்டு அரசு, மீனவர்களை தேடி வருகிறது.இந்நிலையில் மீனவர்களின் நிலை குறித்தும் அவர்களை கண்டுபிடித்து தருமாறும் கடந்த 27ம் தேதி கலெக்டர் வீரராகவராவிடம் நம்புதாளை மீனவர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கோரி மீண்டும் நேற்று கலெகடரிடம் மனு கொடுத்தனர்.