திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடியில் தீயணைப்பு துறையினரின் பேரிடர் மீட்பு ஒத்திகை

திருமங்கலம், அக்.1: கள்ளிக்குடி தீயணைப்புத்துறை சார்பில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்த பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. மழை காலங்களில் திடீரென ஏற்படும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை கள்ளிக்குடி தீயணைப்புத்துறையினர் நடத்தினர். கள்ளிக்குடியை அடுத்து அகத்தாபட்டி கிராமத்தில் நடந்த இந்த மீட்பு ஒத்திகையை நிலைய பொறுப்பு அலுவலர் நாகவிஜயன் தலைமையில் தீயணைப்பு படையினர் செய்து காட்டினர். அகத்தாபட்டியிலுள்ள குளத்தில் மூழ்கி தத்தளித்த பொதுமக்களை எப்படி மீட்பது என்பதனை தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர். இதே போல் பள்ளி மாணவர்களுக்கு தீதடுப்பு ஒத்திகை, விபத்து காலங்களில் சிக்கி கொண்டால் எப்படி மீட்பது என்பது குறித்தும் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

Related Stories: