ஆத்தூர், அக்.1: ஆத்தூர் புதுப்பேட்டையில் கள்ளக்குறிச்சி தொகுதிக்கான எம்பி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த கௌதமசிகாமணி உள்ளார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்கள் பிரச்னைகளை அறிந்து கொண்டும் தீர்வு கானும் வகையில், ஆத்தூர் புதுப்பேட்டையில் திமுக எம்பி அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று ஆத்தூர் நகர திமுக செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. அலுவலகத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எம்பி கௌதம சிகாமணி பேசுகையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு வசதியாக எம்பி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் வாரத்தில் 6 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் செயல்படும். எனவே பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை அலுவலக பணியாளர்களிடம் அளித்தால் அதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். ஆத்தூர் நகராட்சி பகுதியில் தற்போது போடப்பட்டுள்ள சாலை பணிகளில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. அந்த பணிகள் உள்ளிட்ட நகராட்சி, ஒன்றிய அளவில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.