திருவண்ணாமலை,செப். 30: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபதிருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி தினமும் காலை, இரவு நேரங்களில் விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 10ம் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணிதீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இவ்விழாவை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.