தொண்டி, செப். 26: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களின் விற்பனை எவ்வித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புகையிலை பொருள்கள் மனிதனுக்கு நோய்களை உண்டாகி உயிரை பறித்து விடுகின்றன. இவற்றை விற்பனை செய்வதை தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் தொண்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள சில பெட்டிக் கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் புகையிலை பொருள்களின் விற்பனை நடைபெறுகிறது. கடந்த காலங்களில் போலீசார் இது குறித்து அவ்வப்போது சோதனை செய்தனர். ஆனால் தற்போது இவ்வகையான சோதனைக்கு வராததால் கடைக்காரர்களும் தைரியமாக விற்பனை செய்கின்றனர். அனுமதியில்லாமல் மதுபானம் விற்போரை பிடிக்கும் போலீசார் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வோரை கைது செய்ய தயங்குகின்றனர். உடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.