போதிய வடிகால் வசதியின்றி குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் மேலூரில் பொதுமக்கள் அவதி

மேலூர், செப். 25: மேலூரில் தாழ்வான பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி, மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால், குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். மேலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால், நகரில் பல சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. நகரில் கழிவுநீர் வாறுகால்களை நகராட்சி நிர்வாகம் தூர்வாராததால், அவைகளில் குப்பைகள் நிரம்பியுள்ளன. இதனால், மழைநீர், கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்குகிறது.

இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக மேலூர் நகராட்சி வெள்ளநாதன்பட்டியில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வீட்டில் உள்ள பொருட்கள் நனைந்து, பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நகராட்சியில் தாழ்வான குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: