காரைக்கால், செப்.25: காரைக்கால் ரயில் நிலையத்தில், விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, திருச்சி மண்டல ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் ஜி.ஏ.பா தெரிவித்துள்ளார்.பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வே துறை பாதுகாப்பு படை சார்பில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தூய்மை குறித்து, பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு செப்டம்பர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை தூய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணியை, திருச்சி மண்டல ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ஜி.ஏ.பா தொடங்கி வைத்து, ரயில் பயணிகளிடம் தூய்மை குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். பின்னர், ரயில் நிலையத்தின் தூய்மையை ஆய்வு செய்தார்.