நாகர்கோவில், செப். 24: நாகர்கோவில் போக்குவரத்துபிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் செட்டிகுளம் ஜங்ஷனில் நேற்று முன்தினம் மாலை வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சுமார் 20 வயது மதிக்கதக்க ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் வேகமாக வந்துள்ளார். அப்போது அவரை போலீஸ்காரர் லிபின் என்ற வில்லியம்(32) நிறுத்த முயன்றார். வேகமாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவாறு, பைக்கால் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதில் நிலை தடுமாறி போலீஸ்காரர் லிபின் கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த லிபினை, இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் மீட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று திரும்பினார். இது குறித்து லிபின் கோட்டார் போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை என்பதால் செட்டிகுளம் ஜங்சன் பகுதியில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. அந்த கடையில் இருந்து கண்காணிப்பு கேமராவை கொண்டு கோட்டார் போலீசார் விசாரணை நடத்தினர்.