ஊட்டி, செப்.20: ஊட்டியில் பெரும்பாலன இடங்களில் பேனர் மற்றும் தட்டிகள் அகற்றததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.தமிழகத்தில் பொது இடங்கள், அரசு கட்டிடகள், தனியார் கட்டிடங்கள், சாலைகளின் குறுக்கே மற்றும் நடைபாதையோரங்களில் பேனர், தட்டிகள் வைக்க கூடாது என பல முறை உயர் நீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கியது. எனினும். தொடர்ந்து அரசியல் கட்சிகள் வானுயுர்ந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகளை வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் சாலையில் ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற பெண் மீது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று விழுந்ததில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இது தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைக்க கூடாது என்றும் இதனை தமிழக அரசு மற்றும் காவல்துறை கண்காணிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.