பரமக்குடி, செப்.19: பரமக்குடி வாரசந்தை திடலில் உள்ள மினி விளையாட்டு அரங்கில் முறையான பராமரிப்பு இல்லாததால், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதனை தடுக்க வேண்டிய விளையாட்டுத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். பரமக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளின்,விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வைகையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திடலில் மினி விளையாட்டு அரங்கு 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பொருள்கள் வைப்பதற்கு தனி அறைகளும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஓய்வு எடுப்பதற்கு தனித்தனி அறைகள் கட்டப்பட்டுள்ளது. ஒட்டபந்தய களம், உயரம், நீளம் தாண்டுதல், கால்பந்து, ஹாக்கி உள்பட பல போட்டிகள் நடத்த வசதியாக மினி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. சுற்றிலும் சுற்றுச்சுவர் எடுக்கப்பட்டு பாதுகாப்புடன் இருந்தது. தொடக்கத்தில் பாதுகாவலர் பணி நியமனம் செய்து முறையாக பராமரிப்பு செய்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் முறையான பராமரிப்பு இல்லாமல் பயனற்றும் வீரர்களின் அறைகளின் கீழ் தளம் சேதமடைந்து சிமென்ட் பெயர்ந்து காணப்படுகிறது. விளையாட்டு அரங்கின் உள்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு எரியாமல் உள்ளது. இதனால் இரவு முழுவதும் இருளில் முழ்கிய நிலையில் உள்ளது. மாதந்தோறும் நடைபெறும் தடகளப் போட்டிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பரமக்குடி பகுதியில் உள்ள பல்லாயிரம் மாணவ,மாணவிகளுக்கு உரிய பயிற்சி களம் இன்றி பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளையாட்டு திடல்களில் உபகரணங்கள் இன்றி முறையான வழிகாட்டுதல் இல்லாமல் பயிற்சி பெற்று வருவதால் மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறைந்து வருகிறது. ராணுவம், போலீஸ் உள்பட பல வேலைகளுக்கு உடற்தகுதி தேர்வுக்கு செல்பவர்களுக்கு பயிற்சி மேற்கொள்ள போதுமான இடமின்றி தவித்து வருகின்றனர்.