திருச்சி,செப்.19: திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண் பார்வையற்ற வாலிபர் ஒருவர் பயணித்தார். அவர் டிக்கெட் எடுக்கவில்லை. மேலும் அவரிடம் கண்பார்வையற்றோருக்கான அரசு பஸ் பாஸ் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கூறினர்.அப்போது கண்பார்வையற்ற வாலிபர், ‘‘கண்டக்டர் டிக்கெட் வழங்க என் அருகிலேயே வரவில்லை. கண் தெரியாத நான் எப்படி எழுந்து சென்று டிக்ெகட் வாங்க முடியும். என்னை உயர் அதிகாரியிடம் அழைத்து செல்லுங்கள். நான் அவரிடம் பேசி அபராதம் செலுத்துகிறேன்’’ என்றார்.உடனே டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் எடுக்கவில்லை, பாசும் இல்லை, 500 ரூபாய் பைன் கட்டிதான் ஆகவேண்டும் என்றார். நான் அங்கே போய் கட்டுகிறேன் என பார்வையற்ற வாலிபர் கூற, வா எங்கே வேண்டுமானாலும் போகலாம் என கூறி வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு போக கூறியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒருவர், கண்பார்வையற்ற ஒருவரிடம் இப்படி கறாராக அபராதம் வசூலிக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். உடனே டிக்கெட் பரிசோதகர்கள், கண் தெரியாதவர் என்றால் அபராதம் விதிக்க கூடாதா என கேட்டு ரூல்சை காட்டுங்கள் என்கின்றனர்.