நெய்வேலி, செப். 19: குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை கிராமத்தில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் கிளை நூலகம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு வருடங்
களுக்கு முன்பு கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தற்காலிகமாக இந்த நூலகம் இடம் மாற்றப்பட்டது. இந்த நூலகத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் தினந்தோறும் படித்துவிட்டு செல்கின்றனர். மேற்கொண்ட நூலகம் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பயனடைந்தனர். மேலும் மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுக்கான புத்தகங்களை படித்து வந்த நிலையில் இங்கு போதுமான இடவசதி இல்லாததால் இங்கு வந்து படிக்க முடியாமல் சிரமங்களை சந்தித்தனர். இந்த பள்ளி கட்டிடத்தில் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை வெளியே நின்று படித்து வருகின்றனர். எனவே பள்ளி கட்டிடத்தில் செயல்படும் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென்று வெங்கடாம்பேட்டை பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.