சிவகங்கை, செப். 17: சிவகங்கையில் மதுரை, தொண்டி சாலை ரயில்வே கிராசிங்கில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதால் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கையில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரயில் பாதை கிராசிங் உள்ளது. இதில் தென்னக ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் மூன்று ஆண்டுகாலம் நடந்த பணிகள் முடிவடைந்து கடந்த 2016ம் ஆண்டு பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் சுரங்கப்பாதை பணிகள் நடந்து முடிவடைந்து போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. பாலத்தின் மேற்பகுதியில் சென்றால் சிவகங்கை நகர்ப்பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனை வரை செல்லலாம். இதனால் வெளியூர் செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள் பாலம் வழியே செல்லும். சுரங்கப்பாதையில் ரயில்வே கிராசிங் அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள், ரயில்வே ஸ்டேசன், நகராட்சி அலுவலகம் செல்லும் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் செல்வர்.