ஆவடி, செப்.11: பட்டாபிராம், சி.டி.எச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம், சி.டி.எச் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 6 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கிருந்து நூற்றுக்கணக்கான குடிமகன்கள், மது அருந்திவிட்டு சி.டி.எச் சாலையில் அரைகுறை ஆடைகளுடன் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால், அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி பட்டாபிராம், சி.டி.எச் சாலை, சார்லஸ் நகர் பகுதியில் மேலும் ஒரு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மார்க் கடை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.