காஞ்சிபுரம், செப்.11: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமைப் பொருள் குற்றங்கள் சம்பந்தமாக அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அதில், கடைகளில் பயன்படுத்திய வீட்டு சிலிண்டர்கள், 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கலெக்டர் பொன்னையா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி தனிவட்டாட்சியர் பிரியா தலைமையில் அதிகாரிகள் காஞ்சிபுரத்தில் டீ கடை மற்றும் சிற்றுண்டி கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்படும் மானிய விலை சிலிண்டர்களை வணிக நோக்கத்தில் கடைகளில் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்து 2 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.