ஆர்.எஸ்.மங்கலம், செப். 10: ஆர்.எஸ்.மங்கலத்திலுள்ள திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் சந்திப்பில் ரவுண்டான அமைத்து விபத்தை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஆர்எஸ்.மங்கலம் மிகவும் முக்கியமான ஊர். நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய புனித ஸ்தலங்கள் ராமேஸ்வரம் சேதுக்கரை திருப்புல்லாணி உத்தரகோசமங்கை போன்ற திருத்தலங்களுக்கும் தேவிபட்டினம் போன்ற நவபாசன தளத்திற்கும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், அதேபோல் இந்தியாவில் வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் ராமேஸ்வரம் போன்ற புனித ஸ்தலங்களுக்கு செல்வதற்கு இந்த சாலை மிகவும் முக்கியமான வாய்ந்ததாக உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு செல்வதற்கு பிரிந்து செல்லும் இடத்தில் வாகனங்கள் திரும்பும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்சமயம் இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆகையால் இந்த விரிவாக்கம் பணி நடைபெறும்போதே அந்த இடத்தில் ரவுண்டானா அமைப்பது மிகவும் எளிது. எனவே வாகனஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும், இடையூறு ஏற்படாத வண்ணம் ஒரு ரவுண்டானாவை அமைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.