கோவை, செப்.10: கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையும், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி கல்வெட்டியல் பட்டயப்படிப்புத்துறையும் இணைந்து ஐந்து நாள் கல்வெட்டியல் பயிலரங்கத்தை நடத்துகின்றனர். கடந்த 7ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்கும் இந்த பயிலரங்கத்தின் துவக்க நிகழ்ச்சி கொங்குநாடு கல்லூரியில் நடந்தது. இதில் பேரூராதீனம் மருதாசல அடிகளார் பேசுகையில், ‘‘கல்வெட்டியல் பயிலரங்கம் காலத்தின் தேவை. கல்வெட்டுகள் நமது சொத்து. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. அதில் 10 சதவீதமே நூல் வடிவில் வந்துள்ளது. இன்னும் ஆவணப்படுத்த வேண்டியவை நிறைய உள்ளது.’’ என்றார். கல்லூரி முதல்வர் லட்சுமணசாமி, தமிழ்த்துறை தலைவர் முருகேசன், பி.எஸ்.ஜி கல்லூரி கல்வெட்டியல் பட்டய படிப்புத்துறை பொறுப்பாசிரியர் ரவி, உதவி பேராசிரியர் மணிமேகலை உட்பட பலர் பங்கேற்றனர்.