பரமக்குடி, ஆக.22: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் வயர்கள், மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றாமல் மின்வாரியம் அலட்சியம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அதிகமான கிராமங்களை கொண்ட பகுதியாகும். ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல பல்வேறு கிராமங்களின் வயல் பகுதிகள், காட்டுப்பகுதிகளை கடந்தே மின் வயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு வயல் மற்றும் காட்டுப்பகுதிகளில் செல்லும் மின் வயர்களை மின் ஊழியர்கள் யாரும் கண்டுகொள்வது கிடையாது. இவைகள் ஏராளமான இடங்களில் கைகளால் தொட்டு விடும் உயரத்தில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதில் ஏராளமான வயர்கள் நீண்ட நாட்களாக பராமரிப்பு செய்யாமல் அறுந்து விழுவதும் வாடிக்கையாகி வருகிறது. கிராமப்பகுதிகளில் உள்ள ஏராளமான மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. மின்சார வாரியத்தில் ஆரம்ப காலங்களில் இரும்பினால் ஆன மின்கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்வாரியத்தால் சிமென்டால் செய்யப்பட்ட கான்கிரீட் மின்கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்கம்பங்கள் பயன்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அதிலுள்ள சிமென்ட் உதிர்ந்து விரிசலடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.