கொடைக்கானல், ஆக. 22: கொடைக்கானலில் தமிழ்நாடு வாணிப கழக சேமிப்பு கிடங்கில் சட்டமன்ற பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் ஆய்வு செய்தனர். கூட்டுறவு உணவு பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் 2011- 12 முதல் 2016-17 வரையிலான ஆண்டறிக்கை சட்டப்பேரவையில் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து சட்டமன்ற பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவர் சத்யநாராயணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த குழுவில் எம்எல்ஏக்கள் ஆடலரசன், கஸ்தூரி வாசு, சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துறைரீதியான ஆண்டறிக்கையினை காலதாமதமாக பேரவைக்கு சமர்ப்பிக்கும் போது காலதாமதத்திற்கான காரணங்களை அந்தந்த துறைகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இடம் பெற்று அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்குழு தமிழ்நாடு வாணிப கழக தாமத அறிக்கை பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.