நாகர்கோவில், ஆக.22: அண்டை மாநிலங்களில் தண்ணீரை கேட்கும் முன்பு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 8ம் வகுப்பு மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். குமரி உள்பட தமிழகம் முழுவதும் அணைகள் இருந்தாலும், அவை தூர் வாரி போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. குமரியிலும் பேச்சிப்பாறை மற்றும் முக்கடல்அணையை தூர் வார நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்தாலும் அது கிடப்பில் உள்ளது. இதுபோல், குமரியில் பழையாற்றில் மழைக்காலங்களில் பல்லாயிரம் டி.எம்.சி தண்ணீர் கடலில் ெசன்று வீணாக கலக்கிறது. இதற்காக குமரியில் பழையாறு மற்றும் தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்ட, கடந்த 30 ஆண்டுகளுக்கும் முன்பே திட்டமிடப்பட்டாலும், அவை அனைத்தும் கிடப்பில் உள்ளன. இதில் தடுப்பணைகள் மூலம் நீர் மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் அடங்கும். இதற்கிடையே குமரியில் கடந்த 50 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய குளங்கள், நீராழிகள் ஆக்ரமிப்பின் பிடியில் சிக்கி காணமல் போய்விட்டன. பிரதான பெரிய குளங்கள் கூட ஆக்ரமிப்பு செய்யப்பட்டு வீடுகளாக, வணிக நிறுவனங்களாக மாறிவிட்டன. இதன் விளைவு, நிலத்தடி நீர்மட்டமும் குமரியில் வெகுவாக சரிந்து விட்டது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் நிலவுகிறது. கடந்தாண்டு முக்கொம்பில் தடுப்பணை உடைந்து காவிரி நீர் கடலுக்கு சென்று வீணானது.