பரமக்குடி, ஆக.20: தெளிச்சத்தநல்லூர் கிராமத்தில் கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் கட்டுமான பணியை நிறுத்த வேண்டி பொதுமக்கள் முற்றுகையிட்டு, எச்சரிக்கை போர்டு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரமக்குடி அருகே உள்ள தெளிச்சத்தநல்லூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 250 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் தெளிச்சத்தநல்லூர், மணிநகர், சோமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். நாளடைவில் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்ததாலும், போதிய மழை இல்லாததால் கண்மாய் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் தூர்வாராமல் இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரியல் எஸ்டேட் கம்பெனிகள் போலி தனமாக பத்திரப்பதிவு செய்து வீட்டுமனைகளான மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதுபற்றி கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கிராமத்தினர் சார்பாக கடந்த 15 ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிராமத்தினரை மீறி தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யக் கூடாது மீறி பத்திரப்பதிவு நடந்தால் போராட்டம் வெடிக்கும் என கிராமத்தினர் சார்பாக நோட்டீஸ் அடித்து ஒட்டினார்கள்.