வீரேஸ்வரத்தில் முதன்முறையாக மழைநீர் சேகரிப்பு வசதியுடன் கான்கிரீட் சாலை அமைப்பு திருச்சி மாநகராட்சி புது முயற்சி

திருச்சி, ஆக.20: திருச்சி மாநகராட்சி பகுதி வீரேஸ்வரத்தில் முதன் முறையாக மழைநீர் சேகரிப்பு வசதியுடன் கூடிய சிமெண்ட் சாலையை மாநகராட்சி நிர்வாகம் அமைத்த முயற்சிக்கு பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.திருச்சி மாநகராட்சி 5வது வார்டில் உள்ள வீரேஸ்வரத்தில் சிமெண்ட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், முதற்கட்டாக அனைத்து வீடுகளும் பாதாளசாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சாலை அமைக்க அதிகாரிகளால் டெண்டர் விடப்பட்டு ரூ.48லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் நடந்தது. இதில் 280மீட்டர் நீளத்திற்கும், சராசரி 5மீட்டர் அகலத்திற்கும் இந்த சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும் போது தனியார் தரைவழி கேபிள்கள் செல்வதற்கு தனிவசதி ஏற்பட்டது. அதே போல் மழைநீரை சேகரிக்க சாலையின் இருபுறத்திலும் வாய்க்கால் ஏற்படுத்தி சிமெண்ட் கான்கிரீட் போட்டு மூடப்பட்டது.

இந்த வாய்க்காலில் ஒவ்வொரு 50 மீட்டருக்கும் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில். திருச்சி மாநகராட்சியில் முன்மாதிரியாக மழைநீர் சேகரிப்பு வசதியுடன் இந்த சாலை அமைத்துள்ளோம். இந்த சாலையை எந்தவிதத்திலும் சேதப்படுத்தாத வகையில், குழாய்களுக்கு தனி வழி ஏற்படுத்தியும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பு கொடுத்துள்ளோம். இதனால் வீடுகளில் உள்ள கழிவுநீர் இந்த சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் இந்த பகுதியில் மழைநீர் சேகரிப்பு பகுதியாக மட்டுமின்றி தூய்மை பகுதியாகவும் காட்சிதரும். விரைவில் அடுத்தடுத்த பகுதிகளில் இதேபோல் செயல்படுத்தி மழைநீரை சேகரித்து, அந்தந்த பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந்த திட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: