திருவள்ளூர், ஆக. 20: கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த புதுச்சேரி கிராம மக்கள், 100க்கும் மேற்பட்டோர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுச்சேரி கிராமம். இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, போர்வெல் அமைத்து, மேல்நிலை தேக்கத் தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஊராட்சிக்கு, ஊராட்சி செயலர் இல்லாததால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. விசாரித்தபோது, குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறு வற்றி இருந்தது தெரிந்தது. இதனால், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் கொண்டுவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.