திருமுல்லைவாயல் அரசு பள்ளியில் 6 லேப்டாப் திருட்டு

திருமுல்லைவாயல். ஆக.14: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்திய மூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கவேண்டிய 21 லேப்டாப்களை வகுப்பறையில் வைத்திருந்தனர். கடந்த மூன்று நாள் விடுமுறையில் பள்ளியை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளியை திறக்க ஆசிரியர்கள் வந்தனர். அப்போது லேப்டாப் வைத்திருந்த வகுப்பறை பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 21 லேப்டாப்களில் 6 மட்டும் திருடு போயிருந்தது. மர்ம நபர்கள் விடுமுறை நாட்களில் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையை உடைத்து கொள்ளை அடித்து சென்றது  தெரியவந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மேரி ஆண்டனி  கொடுத்தப் புகாரின் அடிப்படையில்  இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். லேப்டாப்பை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: