நாகர்கோவில், ஜூலை 19: பார்வதிபுரம் பாலம் தொடங்குமிடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் அதனை சீர் செய்யும் பணிகள் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.நாகர்கோவில், பார்வதிபுரத்தில் ₹114 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மேல் பகுதியில் கே.பி. ரோட்டில் செல்ல ஒரு வழிப்பாதை அமலில் உள்ளது. மின்வாரிய அலுவலக சாலையில் இரு வழிப்பாதையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. களியக்காவிளையில் இருந்து வருகின்ற வாகனங்கள் பாலத்தின் மீது மின்வாரிய அலுவலக சாலை வழியாகவே செல்ல முடியும். கே.பி. ரோட்டில் செல்ல முடியாது. இந்த நிலையில் பார்வதிபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே பாலத்தை சாலையுடன் இணைக்கும் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பள்ளம் ஏற்பட்டு அது சீர் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பள்ளத்தை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பள்ளம் உருவான பகுதியில் கான்கிரீட் கலவை வைத்து சீரமைக்கப்பட்டது.