வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு

திருச்சி, ஜூலை 17: வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் நடக்கும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வையம்பட்டி, பொன்னம்பலம்பட்டி, செக்கணம், முகவனூர், வீ.பெரியபட்டி, அமையபுரம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் 18 வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வையம்பட்டி கிராம ஊராட்சியில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.06 லட்சத்தில் ஆர்.எஸ்.மணியாரம்பட்டி இடையான் குளத்தில் பரவல் குட்டை அமைக்கும் பணி, ரூ.85 ஆயிரத்தில் ஆர்.எஸ்.மணியாரம்பட்டியில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.1.70 லட்சத்தில் வையம்பட்டியில் உள்ள சின்னாற்று வாரியில் கேபியன் தடுப்பணை-11 அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.1.60 லட்சத்தில் சின்னாற்று வாரியில் கேபியன் தடுப்பணை-111 அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.6.23 லட்சத்தில் தேக்கமலைகோவில்பட்டி செம்மலை ஆற்று வாரியில் சிமெண்ட் கான்கீரிட் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பொன்னம்பலம்பட்டி ஊராட்சியில் ரூ.1.89 லட்சத்தில் பாலப்பட்டியில் ஆட்டுக்கொட்டகை அமைக்கும் பணி, ரூ.11 ஆயிரத்தில் உரக்குழி அமைக்கும் பணி, ரூ.20 ஆயிரத்தில் மாட்டுதொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

செக்கணம் ஊராட்சியில் ரூ.1.70 லட்சத்தில் வீடு கட்டும் பணி, வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சத்தில் கருங்குளம் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, முகவனூரில் ரூ.40 லட்சத்தில் பொத்தப்பட்டியில் கிராம சந்தை கட்டும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். வீ.பெரியப்பட்டி ஊராட்சியில் ரூ.2.50 லட்சத்தில் பூவைநகர் குதிரைகோவில் அருகில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்தும் பணி, ரூ.85 ஆயிரத்தில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.2.32 லட்சத்தில் மண்வரப்பு அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார். அமையபுரம் ஊராட்சியில் ரூ.56.65 லட்சத்தில் சரவணம்பட்டி அடர்மரக்கன்று அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.50 ஆயிரத்தில் ஏ.டி.காலனி தொகுப்பு வீடு பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளதையும், ரூ.2.10 லட்சத்தில் பசுமை வீடு கட்டும் பணி என மொத்தம் 18 பணிகள் ரூ.1.34 கோடியில் நடைபெற்று வருவதை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு இப்பணிகள் அனைத்தும் தரமானதாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: