தஞ்சை, ஜூலை 18: திருக்காட்டுப்பள்ளியில் விளைநிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளி நகரில் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை பணிகளை துவக்கியுள்ளது. இந்நிலையில் விளைநிலங்கள் வழியாக சாலை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார் தலைமையில் ஒன்பத்துவேலி கிராமத்தை சேர்ந்த பத்மநாதன், கிருபானந்தம், சரவணன், மோகன், கலியமூர்த்தி உள்ளிட்ட விவசாயிகள் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலைகாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலங்களில் பல தலைமுறையாக முப்போகம் சாகுபடி செய்து வருகிறோம். கடும் வறட்சியிலும் இங்கு 90 அடிக்குள் நிலத்தடி நீர் கிடைக்கிறது. காவிரி, குடமுருட்டி மூலம் நேரடி நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. குடமுருட்டி தலைமதகிலிருந்து தனி வாய்க்கால் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.70 லட்சத்தில் வெட்டப்பட்டு தண்ணீர் கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் இல்லாத காலங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி நடைபெறும். நெல், கரும்பு, வாழை இவற்றுடன் கோடை சாகுபடியில் உளுந்து, பயிறு ஆகியவை இந்த நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.