தா.பழூர், ஜூலை 18: தா.பழூர் பகுதியில் வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தற்போது மின்மோட்டார் மூலம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை துவங்கிய நிலையில் தா.பழூர் சுற்றியுள்ள பகுதியில் சித்திரை கார் அறுவடை நடந்து வருவதால் வைக்கோல் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இருந்தும் அதிகப்படியான வைக்கோல் வாகனங்கள் தா.பழூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. அவற்றில் அதிகப்படியான வாகனங்கள் இரவு நேரங்களில் பயணிக்கின்றன. இதனால் மாலை வேளையில் கடைவீதிகளில் கூடும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.கும்பகோணத்தில் இருந்து தா.பழூர் வழியாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலால் பேருந்துகள் இயங்குவதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.