க.பரமத்தி, ஜூலை18: நஞ்சைகாளகுறிச்சி அருகே போதிய ஆவணமின்றி ஆற்று மணல் ஏற்றி கொண்டு டிப்பர் லாரியில் வந்த இருவரை சின்னதாராபுரம் போலீசார் கைது செய்தனர்.கரூர் அடுத்த எலவனூர் முதல் நஞ்சைகாளகுறிச்சி செல்லும் தார்சாலையில் அனுமதி இன்றி மணல் கொண்டு செல்லப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபவர்களை பிடிக்க மாவட்ட அதிகாரிகள் உத்தரவின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் அப்பகுதிக்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியினை வாகன சோதனையிட்டுள்ளனர். அதில் அனுமதியில்லாமல் அமராவதி ஆறு பகுதியில் இருந்து டிப்பர் லாரியில் 6 யூனிட் மணல் ஏற்றி கொண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. லாரியை இயக்கி வந்த அரவக்குறிச்சி தாலுகா மலைகோவிலூர் அருகே ரங்கபாளையம் செங்கோடன் மகன் சிவசாமி (31), என்பதும் இவருடன் லாரியில் வந்த மலைகோவிலூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்(40) ஆகிய இருவர் மீது சின்னதாராபுரம் போலீசார் மணல் திருட்டு வழக்கு பதிந்து கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.