ஊத்துக்கோட்டை, ஜூலை 18: பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழா முன்னிட்டு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துரிதமாக செய்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 10 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். அவ்வாறு, ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்ற வசதிகளை பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் செய்து தருவார்கள். ஆனால் இதுவரை தற்காலிக கழிவறைகளோ, குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டிகளோ வைக்கவில்லை.