மதுராந்தகம், ஜூலை 18: மதுராந்தகம் அருகே, கிணற்றில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி விவசாய கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் இருந்து, நேற்று மாலை பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் மதுராந்தகம் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, கோணியில் கட்டி வீசப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கிணற்றில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், தீயணைப்பு துறையினர் சென்று கிணற்றில் கோணி மூட்டையில் இருந்த சடலத்தை மீட்டனர். பின்னர், பிரித்து பார்த்தபோது, அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் இருந்தது தெரியவந்தது. இவரை, யாராவது எங்கேனும் கொலை செய்துவிட்டு கோணி மூட்டையில் கட்டி, இந்த கிணற்றில் வீசி விட்டு சென்று இருக்கலாம் என தெரியவந்தது.