நாகர்கோவில், ஜூலை 18: இரணியல் அருகே தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. அதிர்ஷ்டவசமாக ஏரநாடு எக்ஸ்பிரஸ் தப்பியது. நாகர்கோவில் - மங்களூர் இடையே எரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் நள்ளிரவு 11.45 மணியளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்து, பின்னர் அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு செல்லும். வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு எரநாடு எக்ஸ்பிரஸ் இரவு 11.20 மணியளவில் பள்ளியாடி அருகே வந்து கொண்டு இருந்தது. பள்ளியாடி - இரணியல் அருகே ரயில் வந்து கொண்டு இருந்த போது கண்டன்விளை என்ற இடத்தில் ரயிலில் திடீரென அதிர்வு உண்டானது. உடனடியாக ரயில் பைலட் சாதுர்யமாக செயல்பட்டு, ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலை நிறுத்தினார். பின்னர் சம்பவ இடத்தில் பார்த்த போது கம்பி, கிடந்தது தெரிய வந்தது. ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற சதி செயலுக்கு திட்டமிட்டு, மர்ம நபர்கள் இந்த கம்பியை வைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து உடனடியாக ரயில்வே பைலட், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ரயில்வே அதிகாரிகளும் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.