சத்தியமங்கலம், ஜூலை 16: சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (60). இவரது கணவர் கிட்டான். இவர், கடந்த 2007ம் ஆண்டு இறந்தார். கிட்டான் கட்டிட தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்ததால் இயற்கை மரணம் அடைந்ததற்கு வழங்கப்படும் உதவித்தொகை வழங்கக்கோரி காளியம்மாள் ஈரோடு கட்டிடத் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி ஒப்புகைச்சீட்டை வழங்கினர். ஆனால், பல ஆண்டு ஆகியும் இதுவரை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து காளியம்மாள் பலமுறை ஈரோடு சென்று அதிகாரிகளிடம் கேட்டபோது சத்தியமங்கலத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலர்கள் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர்.