ராமநாதபுரம், ஜூலை 16: பரமக்குடி தாலுகா தீயனூர் கிராமத்தில் குடிநீர், நிழற்குடை என அடிப்படை வசதிகள் இல்லை என கலெக்டரிடம் மனு அளிக்க ஏராளமான கிராம பொதுமக்கள் வந்திருந்தனர். மனுவில், எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள்,ஆண்கள் அனைவரும் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறோம். தீண்டாமை ஒழிப்பு கிராமம் என அரசு ரூ.10 லட்சம் நிதி கலெக்டர் மூலமாக வழங்கப்பட்டது. அந்த பணத்தை எங்கள் கிராமத்திற்கு முறையாக பயன்படுத்தாமல் ஊராட்சி செயலாளர் வெவ்வேறு தீர்மானத்தை ஏற்றி செலவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்களால் எந்த பயனும் எங்களுக்கு கிடையாது.
கிராமத்தின் தண்ணீர் தேவைக்காக 600 அடி போர்வெல் அமைத்து தெருக்களில் குழாய் மூலமாக தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் தீயனூர் காலனி பஸ் ஸ்டாபில் நிழற்குடை இல்லை. காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் வெயிலில் காத்து கிடக்க வேண்டியுள்ளது. ஒரு பஸ் ஸ்டாப் உள்ள காலனி பகுதியில் நிழற்குடை அமைத்து தரவேண்டும்.