பேராவூரணி, ஜூலை 12: புதுக்கோட்டை மாவட்டம் மலையூரை சேர்ந்த விவசாயி பழனிவேல். இவரது மகன் பிரவீன்குமார் (19). தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் திருச்சிற்றம்பலம் துலுக்கவிடுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்றிரவு துலுக்கவிடுதி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மொய்விருந்து விழா சம்மந்தமான பிளக்ஸ் பேனர்கள் காற்றில் விழுந்து விட்டது. அதை தனது நண்பர்கள் மூலம் பிரவீன்குமார் சீரமைத்து கொண்டிருந்தார். அப்போது அதன் வழியாக மேலே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் பிளக்ஸ் போர்டின் இரும்பு கம்பிகளில் பட்டு திடீரென சாய்ந்ததில் கீழே நின்று கொண்டிருந்த பிரவீன்குமார் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.