கும்பகோணம், ஜூலை 12: கும்பகோணம் நகராட்சி அலுவலகம் பின்புறம் பக்தபுரி தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கழிவுநீர் செல்வதற்கு பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை குழாயை பராமரிப்பு செய்யாததால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தெருவில் உள்ள அனைத்து வீடுகளின் பாதாள சாக்கடைக்கு வரும் கழிவுகள் அனைத்தும் நகராட்சி அலுவலகம் முன் தேங்கியது. பின்னர் கடந்த 6 மாதமாக தேங்கியிருப்பதால் தற்போது குட்டை போல் ஆனது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது.இதுகுறித்து அக்குடியிருப்பு வாசிகள், நகராட்சி அலுவலகத்தில் புகாரளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் குடியிருப்புகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அலுவலகம் பின்புறம் தேங்கியுள்ள கழிவுநீர் குட்டைகளை உடனடியாக சுத்தப்படுத்தி சுகாதாரமாக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பிரபு கூறுகையில், பாதாள சாக்கடை குழாயை சீர் செய்யாததால் அடைப்பு ஏற்பட்டது.