திருச்சி, ஜூலை 11: திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்கு திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சொந்தமான பஸ்களில் அழைத்து வரப்பட்டு படித்து வருகின்றனர். மாலையில் பள்ளி முடிந்து மீண்டும் பஸ்களில் வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் பள்ளி முடிந்ததும் திருச்சி நகர பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்டவர்களை பஸ்சில் அழைத்துக்கொண்டு சென்றனர். பஸ்சை நடராஜபுரத்தை சேர்ந்த மனோகர்(48) என்ற டிரைவர் ஓட்டினார். அனைவரையும் வீடுகளில் விட்டு விட்டு மீண்டும் பள்ளிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அரியமங்கலம் மேம்பாலத்தில் பஸ் ஏறியபோது டிரைவர் மனோகருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவர் சமயோஜிதமாக பாலத்தின் ஓரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு பஸ்சில் அப்படியே சாய்ந்துவிட்டார்.