பரமக்குடி, ஜூன் 27: பரமக்குடி நகர் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சமாளிக்கும் விதமாக மாற்று ஏற்பாடு குறித்து எம்.எல்.ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால், போதுமான தண்ணிர் வசதி இல்லாமல் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரமக்குடி உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சில கிராமங்களில் கால்நடைகளுக்கு பயன்படுத்த கூடிய உப்பு தண்ணீரை கொண்டு தாகம் தீர்த்து வருகின்றனர். சில கிராமங்களில் பெண்கள் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து கசியும் தண்ணீரை பிடிக்க இரவு பகலாக காலி கூடங்களுடன் காத்து கிடங்கின்றனர். இதுகுறித்து தினகரன் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளின் அலுவலர்களை வரவழைத்து ஒன்றிய அதிகாரிகள் முன்னிலையில் குடிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை செய்தார்.