கோவை, ஜூன் 27:கோவை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு முகாமை மாவட்ட கலெக்டர் ராசாமணி நேற்று துவங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் ராசாமணி பேசியதாவது: தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் மக்களுக்கும் உயர் தரமான சிகிச்சை அளித்திட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக நவீனப்படுத்தப்பட்டு வருகின்றது. கோவை அரசு மருத்துவமனை கட்டமைப்பு வசதி, உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் என அனைத்திலும் தன்னிறைவு பெற்றுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் குணப்படுத்த இயலவில்லை என்று தெரிவிக்கப்படும் நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை வழங்கி அவர்களை ஆரோக்கிய வாழ்விற்கு திரும்ப அளித்து வருவது பாராட்டுக்குறியது.