தஞ்சை, ஜூன் 25: தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பொது தகவல் அலுவலர்கள் 30 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதீப்குமார் தெரிவித்தார்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் பிரதீப்குமார் பங்கேற்று 20 வழக்குகளை விசாரித்தார்.பின்னர் அனைத்து அரசு அலுவலர்கள் அடங்கிய கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாநில தகவல் ஆணைய ஆணையர் பிரதீப்குமார் பேசியதாவது: அரசு அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்கள் கேட்கும் விவரங்களை அப்போதே கொடுத்துவிட்டால் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திடம் வர வாய்ப்பில்லை. இந்த சட்டம் என்பது இன்னொரு சுதந்திரமாக கருதப்படுகிறது. ஒருவர் 25 கேள்விகள் வரை கேட்கலாம். அதற்கு பதில் அளிப்பது அரசு அலுவலர்களின் கடமையாகும்.ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டால் 30 நாட்களுக்குள் பதில் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரர் மேல்முறையீடு என்ற வரம்புக்குள் வரவே கூடாது.