பவானி, ஜூன் 25: பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா லேப்டாப் வழங்கக் கோரி முன்னாள் மாணவியர் பெற்றோருடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் 1,000க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, 20க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவியர் தங்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கக் கோரி பள்ளிக்கு பெற்றோருடன் வந்திருந்தனர். புதிதாக வந்தவர்களுக்கே தற்போது மடிக்கணினிகள் வழங்கப்படும் எனவும், முன்னாள் மாணவியருக்கு பின்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களாக லேப் டாப் வழங்கப்படாத நிலையில் தங்களுக்கு வழங்கிய பின்னரே, அனைவருக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.