தொண்டி, ஜூன் 21: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை எவ்வித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களால் மனித உயிருக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படுவதால் இவற்றை விற்பனை செய்வதை தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் தொண்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டி கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் புகையிலை பொருள்களின் விற்பனை நடைபெறுகிறது. கடந்த காலங்களில் போலீசார் இது குறித்து அவ்வப்போது சோதனை செய்தனர். ஆனால் தற்போது இவ்வகையான சோதனைக்கு வராததால் கடைக்காரர்களும் தைரியமாக விற்பனை செய்கின்றனர். திருட்டுத்தனமாக மதுபானம் விற்போரை பிடிக்கும் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.