பூந்தமல்லி, ஜூன் 21: திருவேற்காடு நகராட்சி பூங்காவை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 23 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை சீரமைக்கவும், குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் அமைக்கவும் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை பெருநகர வளரச்சி குழுமம் ₹7.65 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்லவன் நகர் பகுதியில் உள்ள பூங்காவை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த பூங்காவை சுற்றி சில வீடுகளின் மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. மேலும் இப்பூங்காவின் ஒரு பகுதியை அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழியாக பயன்படுத்தி வந்தனர். இதற்காக நகராட்சி நிர்வாகம் அந்த வழியில் சிமெண்ட் சாலையும் அமைத்து கொடுத்திருந்தது.