ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 19: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் பாலித்தீன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகின்றது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. தமிழகத்தில் பாலித்தீன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடாகவே மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே பாலித்தீன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருப்பாலைக்குடி, ஆனந்தூர், சனவேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடை முதல் டீக்கடை, பேக்கரி, ஹோட்டல் மற்றும் அனைத்து கடைகளிலும் பாலித்தீன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலித்தீன் பயன்பாட்டை தடை செய்வதற்கு முக்கிய நோக்கம் மழை பெய்யும் போது மழைநீர் நிலத்தடிக்கு செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததாக இல்லாமல் மாசுபடுகிறது என்பதற்காகவே பாலித்தீன் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது.