திருவள்ளூர், ஜூன் 19: திருவள்ளூர் மாவட்டத்தில் விஏஓ அலுவலகங்களில் கழிப்பறை இல்லாததால் அங்கு பணியாற்றும் பெண் அலுவலர்கள் திறந்தவெளி மறைவிடத்தை தேடி செல்லும் அவல நிலை உள்ளது. இருக்கும் கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விஏஓ அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணியாற்றுபவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் பெண் அலுவலர்கள். அலுவலகங்கள் பல இடங்களில் பழைய கட்டிடமாக உள்ளது. ஒரு சில இடங்களில் ஊராட்சி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்குகிறது.இவற்றில் 400க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் கழிப்பறை வசதி இல்லை. ஒரு சில புதிய கட்டடங்களில் மட்டும் கழிப்பறை கட்டப்பட்டிருந்தாலும், அங்கும் முறையான தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க அவதிப்படுகின்றனர்.