கும்பகோணம், ஜூன் 18: கும்பகோணம் ஆர்டிஓ வீராசாமியிடம் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன் கோரிக்கை மனு அளித்தார். அதில் திருஆருரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த சட்டபூர்வ விலையான ரூ.83.62 கோடியை கரும்பு அறுவடை செய்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை செலுத்தவில்லை.
மேலும் பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விவசாயிகள் பெயரிலேயே அவர்களுக்கு தெரியாமல் கடன் வாங்கியுள்ளனர். இது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். இதன்மூலம் விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி ரூ.350 கோடி மோசடி நடந்துள்ளது.இதுகுறித்து கடந்த ஜனவரி 8ம் தேதி, அதைதொடர்ந்து 28ம் தேதிகளில் தலைமை செயலகத்தில் ஆலை நிர்வாகத்தின் மீது மோசடி புகார் கொடுத்தோம். இந்த மோசடியை விசாரிக்க சிபிஐ மூலம் ஆணையிடுமாறு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றோம்.ஆனால் இந்த புகார் குறி்த்து அமைச்சர், 2 உயர் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்ட விவசாயி ஸ்டாலின் என்பவர், அந்த மாவட்ட கலெக்டரிடம் ஆலை உரிமையாளர் ராம.தியாகராஜன் மீது மோசடி புகார் செய்தார். அதன்பேரில் கடந்த மே 8ம் தேதி ராம தியாகராஜனை சென்னையில் இருந்து கடலூர் போலீசார் அழைத்து வந்தனர் ஆனால் அரசியல் தலையீட்டின் காரணமாகவும், அதிகாரவர்க்கத்தின் தலையீடு காரணமாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.