பைக்கில் வந்த தொழிலாளி மாரடைப்பால் மரணம்

பாடாலூர், ஜூன் 18: பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து இறந்தார். நாமக்கல் மாவட்டம் பொம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜ் மகன் சக்திவேல் (35). இவர் திருச்சி திருவெறும்பூரில் தங்கிவெல்டிங்  வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள ஒரு கிரஷருக்கு வெல்டிங் பணி செய்வதற்காக வந்து விட்டு மீண்டும் திருச்சி நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது ஆலத்தூர்கேட் அருகே வந்து கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பைக்கிலிருந்து கீழே சாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: