குமாரபாளையம், ஜூன் 14: பாலிடெக்னிக் வாரியத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்களை பெற்று குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் வாரியத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி, இரண்டாமாண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவி முஷ்கான்குமாரி 700க்கு 691 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இசிஇ மாணவி உத்ராஞ்சலி 690 மதிப்பெண்ணும், குருபிரியா 688 மதிப்பெண்ணும், ஜூப்பிதா 687 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி முஷ்கான்குமாரி, உத்ராஞ்சலி ஆகியோர் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். முதலாமாண்டு இசிஇ மாணவர் சுராஜ்பட்டேல் முதல் பருவத்தேர்வில் 800க்கு 781 மதிப்பெண்களை பெற்று மாநில தர பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
மேலும், இவர் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இது தவிர 17 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை எக்ஸல் நிறுவனங்களின் தலைவர் நடேசன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர்கள் சுப்பிரமணியன், கணேஷ்குமார் மற்றும் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் பாராட்டினர்.